17 ஆகஸ்ட், 2013

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது கணவனே!.


இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது ............கணவனே!.
என்ற ஆய்வுக்காக அழைக்கப்பட்டு உள்ளேன்.

மனைவியின் புறத்திலே எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், எத்தனை குற்றச்சாட்டுகள் மனைவியின் புறத்திலே இருந்தாலும் கூட அந்த குற்றங்கள் உருவாக காரணம் யார்? எத்தனை குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சாட்டலாம். ஆனால் அந்த குற்றங்கள் உருவாக அடிப்படை அசல் காரணம் கணவன் தான்.





கண்ணியமிகு நடுவரவர்களே!
இல்லறத்தினுடைய பொறுப்பை, நிர்வாக திறனை மார்க்கம் யாரிடம் கொடுத்துள்ளது? நிர்வாகத்திறனை கணவனிடம் தான் கொடுத்துள்ளது.

ஷரீஅத் ரீதியாக நாம் பார்த்தாலும், இந்த உலக ரீதியாக பார்த்தாலும் குடும்பத்தினுடைய நிர்வாக பொறுப்பை கணவனிடம் தான் இறைவன் கொடுத்துள்ளான்.

அர்ரிஜாலு கவ்வாமூன அலன் நிஸாஇ

அல்லாஹ் அழகாக சொல்கிறான். ஆண்கள் பெண்களை, கணவன்மார், மனைவிமார்களை நிர்வகிப்பவர்கள் ஓர் இல்லறத்திலே இடையூறு ஏற்படுகிறது என்று சொன்னால் அங்கு நிர்வாகம் சரி இல்லை. 

நிர்வாகத்திறனை கணவன் சரியாக கொண்டு செல்லாததினால் தான் எல்லாவிளைவுகளும் ஏற்படுகிறது என்று முதல் குற்றச்சாட்டை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அடுத்தப்படியாக ஒவ்வொரு குடும்பங்களிலேயும் பார்க்கிறோம். ஏதாவது ஆலோசனை கேட்டால் கொஞ்சம் பொறுங்க வீடு வரை போய் வருகிறேன். எல்லா கணவன்மார்களும் செய்து வரும் தவறு நல்ல தெளிவான விஷயமாக இருக்கும். உறுதியான விஷயமாக இருக்கும். என்னங்க எப்படி செய்யலாம் என கேட்டால் இருங்க வீட்ல கேட்டு சொல்கிறேன் என கூறுவது.

அல்லாஹ் நிர்வாகத்தை கணவனிடம் ஒப்படைத்துள்ளான். ஆனால் இந்த கணவன் தான் நிர்வாகப் பொறுப்பை தானே ஏற்காமல் மனைவியிடம் ஒப்படைத்த விளைவு தான் அத்தனை  இடையூறும் ஏற்படகாரணமாகும்.

எந்த குடும்பத்திலும் எந்த பிரச்சினையும் எடுத்து பாருங்க கணவன் தன் நிர்வாக திறனை விட்டுக் கொடுத்ததினால் வந்த விளைவாக தான் அத்தனை பிரச்சினைகளும் இருக்கும்.

அடுத்தப்படியாக மனைவியை கண்டிக்க கூடிய விஷயத்திலே கணவன் தவறிவிடுவது. கண்டிப்பிலே சலுகை காட்டுவது. மனைவி தவறு செய்யும் நேரத்திலே கணவன் கண்டிக்க வேண்டும். அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் மனைவிக்கு துணிச்சல் வருகிறது. துணிச்சல் வருவதினால் தான் பலதவறுகள் உருவாகி எல்லோரின் இல்லறத்திற்கும் இடையூறாக ஆகிவிடுகிறது.

ஒரு மனைவி தங்கமான் வாங்கி கேட்டாள் கணவன் தன் சொத்தை விற்று வாங்கி கொடுத்தான். சிறிது காலம் கழிகிறது அந்த தங்கமான் காணாமல் போகிவிடுகிறது.
 மறுபடியும் தங்கமான் வாங்கி கேட்க, இப்ப கணவனுக்கு கவலை ஏற்பட்டு சோகமாக இருக்கிறான். இப்ப அவனது நண்பன் வருகிறான். அவனிடம்; சோகத்திற்கான காரணம் கேட்கிறான். அவன் தங்கமான் விபரங்களை சொல்ல, உடனே இவன் கூறினான்.'டேய்! நீ ஏண்டா ஆரம்பத்திலேயே அவளை கண்டிக்காமல் தங்கமான் வாங்கி கொடுத்தாய்! நீ இப்படி சொல்லி இருக்கலாமே!.
அன்பே இதுவுமோ அந்தமான்
நீயுமோ கவரிமான்
உனக்கேன் அந்த மான்
வா கமான்!    என்று கூறியிருக்கலாமே என்று ஏசினான்.
மனைவியை கண்டிக்கக் கூடிய நேரத்திலே கண்டிக்காத விஷயத்திலே கணவன் குற்றவாளி தான்.
இதே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் அருமை மனைவிமார்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இரு கண்களும் தெரியாத உம்முமக்தூம் என்ற நபித்தோழர் வருகிறார். இதை கண்ட நபிகளார் தம் மனைவிமார் இருவரிடமும் உம்மு மக்தூம் வருகிறார் உள்ளே போங்க என்ற போது மனைவிமார்கள் சொன்னார்கள். 'யாரஸுலல்லாஹ் அவருக்கு தான் கண் தெரியாதே' என்ற போது, நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள். 'உங்கள் இருவருக்கும் கண் தெரியுமா? தெரியாதா? என கண்டிக்கிறார்கள். இது போன்ற ஒரு ஒப்பற்ற தலைவரை இந்த உலகம் கண்டிருக்குமா? சொல்லுங்கள்?.......!
மேலும் அல்லாஹ்வும் ரஸுலும் கொடுத்த சலுகையை கணவன் தவறாக பயன்படுத்துகிறான். வேறெங்கும் தேவையில்லே நடுவர் அவர்களே! 
ஷரீஅத் கோர்ட்டாகட்டும். நம்முடைய நிர்வாகத்தினுடைய பஞ்சாயத்தாகட்டும், கோர்ட்களிலே சென்று பார்த்தால் குடும்ப பிரச்சினை கணவன் மனைவி பிரச்சினை தான் ரொம்ப வருகிறது.
அவைகளில் முக்கியமாக வரக்கூடியது தலாக்வுடைய உரிமை. கணவன் எதற்கெடுத்தாலும் தலாக் சின்னசின்ன விஷயங்களுக்கெல்;லாம் பட்டுன்னு தலாக்.
தலாக் யார் கொடுக்கிறா! கணவன் தான் கொடுக்கிறான். கணவன் மனைவி நல்ல முறையிலே வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த தருணத்திலே சிறிய தவறுக்காக உடனே தலாக்... தலாக்... தலாக்... கத்திரிக்கா மாதிரி இந்த தவறை செய்பவன் கணவன் தான்.
அந்த தலாக் என்ற வாசகத்தை பயன்படுத்துவதற்கு 8 அமைப்புக்கு பிறகு தான் தலாக் என்ற வாசகத்தை பயன்படுத்த அல்லாஹ்வும் ரஸுலும் அனுமதி கொடுத்து உள்ளனர்.
முதலில் மனைவி புறத்திலே தவறு ஏற்படுகிற போது முதலில் என்ன செய்யனும் வஸனத்தின் தொடரிலே அல்லாஹ் சொல்கிறான். 
ஃபஇழூஹுன்ன. நீங்க அந்த மனைவிமார்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்கிறான். கணவன் செய்ய வேண்டிய முதல் வேலை உபதேசம் செய்வது.
2வது வஹ்ஜுர்ஹுன்ன நீங்கள் படுக்கறையிலிருந்து தள்ளி வையுங்க. 3வது வழ்ரிபூஹுன்ன. நீங்கள் காயம் படாதவாறு கன்னத்திலே தவிர மற்ற இடங்களிலே லேசாக தட்டுங்க!

 அதிலேயும் திருந்தவில்லையெனில் 4வது உங்கள் குடும்பத்தார்களுக்குள்ளேயே ஒரு பஞ்சாயத்து மாதிரி வைத்து சரிபண்ணுங்க! அதற்கும் ஒத்து வரவில்லையெனில் ஷரீஅத் கோர்ட்டுக்கு வாங்க...

5வதாக கணவன் புறத்திலிருந்து கொஞ்ச நீதமானும், மனைவி புறத்திலிருந்து கொஞ்ச நீதவான்களும் வந்து அந்த இரண்டு பேருக்கு மத்தியில் உள்ள பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். ஷரீஅத் கோர்ட்டை அணுக வேண்டும். அதற்கும் ஒத்து வரவில்லையெனில் அடுத்த கட்டமாகத் தான் அந்த மனைவி தொழுகை உள்ள காலகட்டத்திலே ஒரே ஒரு தலாக் விட வேண்டும். அதுவும் 3மாதத்திற்குள் மீட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகும் அவள் திருந்தவில்லை எனில் 2வது ஒருமுறை தலாக் சொல்ல வேண்டும். அதற்கும் ஒத்துவரலேன்னு சொன்னால் அதற்கு பிறகு தான் 3வது தலாக் சொல்ல அனுமதி வழங்குகிறது.

ஆனால் இன்றைய கணவன்மார்கள் உபதேசமும் கிடையாது. ஒதுக்கி வைப்பதும் கிடையாது. ஆனால் அடிமட்டும் இருக்கிறது. ஒரு சிறிய தவறு செய்தால் உடனே படார்னு அடி. ஏதாவது எதிர்த்து பேசினால் உடனே தலாக்.

இந்த குற்றச்சாட்டை செய்பவன் யார் கணவன் தான்.
கணவன் மனைவியினுடைய உணர்வுகளை புரிந்து நடப்பதில்லை. தனக்கு எப்படி கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று அந்த கணவன் விரும்புகிறானோ, தனக்கு பிரியமான கணவனாக இருக்க வேண்டும் என்று மனைவி விரும்புவாள். ஆனால் பிரியமான கணவனாக இவன் நடப்பது கிடையாது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களிடம் எப்படி வருவார்கள் என்று கேட்கிற பொழுது அன்னை ஆயிஷா (ரலி) சொன்னார்கள். 'ரஸுலுல்லாஹி (ஸல்) இரவு காலங்களில் என்னிடம் வருகிற பொழுது மிஸ்வாக் செய்வார்கள் பல் துலக்கிக் கொண்டு வருவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயற்கையிலேயே சுத்தமானவர்க்ள நறுமணமிக்கவர்கள் அந்த நபிகளார் இரவு காலங்களிலே மனைவிமார்களின் உணர்வுகளை விளங்கி வருகிற பொழுது சுத்தமாக வருகிறார்கள்.

ஆனால் கணவன் இன்று என்ன செய்கிறான்? உள்ளே நுழைகிற போNது சிசர் குடிக்கிறான், கஞ்சா அடிப்பது அல்லது குவாட்டர் அடிப்பது இதெல்லாம் அடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறான்.

இங்கு எப்படி? இனிய இல்லறம் இருக்கும்? அப்ப இந்த இனிய இல்லறத்திற்கு இடையூறு விளைவிப்பவன் கணவன் தான். 
மனைவியிடம் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை வாங்காத மாட்டுக்கும், கறக்காத பாலுக்கும் சண்டை.

கணவன் சொன்னானாம் நான் ஒரு மாடு வாங்க போறேன். மனைவி சொன்னாளாம். சீக்கிரம் வாங்குங்க வாங்கினா பால் கறக்கலாம். பால் கறந்தால் எங்கம்மாவுக்கு கொடுப்பேன் எங்கப்பாவுக்கு, என் அண்ணனுக்கு கொடுப்பேன். என் தங்கச்சிக்கு கொடுப்பேன் என அடுக்கினாள். என்னடி உங்க குடும்பத்துக்கா சொல்றே என்று பளார்னு ஒரு அறை அறைந்தானாம். இதுதான் வாங்கதாத மாட்டிற்கும், கறக்காத பாலுக்கும் சண்டை இப்படி கணவன்; இடையூறு செய்தால் நிம்மதி எப்படி இருக்கும்.

அல்லாஹ் திருமறையிலே ஃபிர்அவ்னுடைய மனைவி ஆஸியா அம்மாவை முஃமினனான பெண்களுக்கு அவர்கள் போல வாழனும் என சுட்டிக் காட்டுகிறான் ஃபிர்அவ்ன் என்ற கணவன் ஆஸியா அம்மாவுக்கு செய்த கொடுமைகளை அல்லாஹ் குர்ஆனிலே சொல்கிறான். அவனது மனைவியே துஆ செய்றாங்க 'யாஅல்லாஹ் இந்த ஃபிர்அவ்னுடைய கொடுமையிலிருந்தும் இவனுடைய தீய செயல்பாடுகளிலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக! என அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் அல்லாஹ் காப்பாற்றினான்.

ஃபிர்அவ்ன் மனைவிக்கு செய்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல இன்று இருக்கிற கணவன்மார்கள் தம் மனைவிமார்களுக்கு செய்கிற கொடுமைகள் ஏராளம் ஏராளம்.

பீடி குடித்து விட்டு மனைவிக்கு சூடு வைப்பது. சிறுசிறு பிரச்சனைகளுக்கு தாய்வீடு அனுப்பி வைப்பது.
சரி செய்ய வேண்டிய விஷயங்களை சரி செய்யாமல் அதை ஊர் முழுவதும் பரப்பி மனைவி மீது சந்தேகப்படுவது. ஃபிர்அவ்ன் இதே செயலை செய்தான் துன்புறுத்தினான். அல்லாஹ் அதை உதாரணமாகவே சொல்லி காட்டுகிறான் கணவன் கொடுமை செய்கிறான் என்ற அமைப்பிலே அல்லாஹ்வே சொல்லி காட்டுகிறான். இன்று ஃபிர்அவ்ன் இல்லாவிட்டாலும் ஃபிர்அவ்னுடைய குணங்கொண்டு வாழும் கணவன்மார் பலர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நடுவரவர்களே!

மேலும் நிறைய வீடுகளில் பெற்றோர்களை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் நிறைய பார்க்கிறோம் ஒருவன் அழகாக சொன்னான்.

'தாயுக்கு பின் தாரம்
தாரம் வந்த பின்
தாய் ஓரம்'

இதற்கு மனைவியை குறை சொல்ல முடியாது. சரி மனைவியே சொன்னாலும் கூட இந்த கணவனுக்க அறிவு எங்கே போச்சு.
ஹழ்ரத் அலி (ரலி) அவர்களிடம் ஒரு தாய் தம் மகனை அழைத்து வருகிறார்கள். அலி(ரலி) அவர்களே! என் மகனுக்கு உபதேசம் செய்யுங்கள் என் மகன் என்னை வீட்டை விட்டு துரத்துகிறான், ஒதுக்குகிறான் என்றபோது அறிவுக் கரூவூலம் ஹழ்ரத் அலி(ரலி) சொன்னார்கள். தன் வயிற்றிலே இடம் கொடுத்த அன்னைக்கு வீட்டிலே இடம் கொடுக்க மறுக்கிறாயா? என கடிந்து கொண்டார்கள் ஆக பெற்றோரை ஒதுக்குவது கணவனே பெரிய காரணமாக இருக்கிறான்.
கண்ணியத்திற்குரியவர்களே! மனைவி பேச்சை கேட்டு பெற்றோரை ஒதுக்கக்கூடிய கணவன்மார் எத்தனை பேர்? பெற்றோரை உதாசீனப் படுத்தும் கணவன்மார் எத்தனை பேர்?
சொல்லலாம் திருமணத்துக்கு பிறகுதானே ஒதுக்குகிறான் என்று இருந்தாலும் அந்த நிர்வாக திறனை அல்லாஹ் யார் கையிலே கொடுத்துள்ளான். கணவருடைய கையிலே தான கொடுத்துள்ளான். இவன் சிந்தித்து பெற்றோரை தன் பராமரிப்பில் வைப்பது கணவரின் பொறுப்பு. எனவே அந்த குற்றத்தையும் கணவன் தான் செய்கிறான்.

மேலும் பெண்களுக்கு குவியல் குவியலாக மஹரை கொடுத்து திருமணம் செய்ய இறைவன் கூறுகிறான். 
ஆனால் கணவன் என்ன செய்கிறான்;. வெட்கமே இல்லாமல் வாங்குகிறான். 

ஒருவன் சொன்னான் 
10பைசா கேட்டால் பிச்சைக்காரனாம்
10லட்சம் கேட்டால் மாப்பிள்ளையாம்
இது மகா பிழையல்லவா?

ஒரு கணவனாவது ஹழ்ரத் என் மனைவிக்கு எவ்வளவு மஹர் கொடுக்க வேண்டும்.  அதிகமஹர் எவ்வளவு? என கேட்ட ஒரு கணவன் உண்டா? நெஞ்சிலே கைவைத்து சொல்லுங்க? வரதட்சணை பற்றி ஒரு கவிஞன் சொன்னான்.

'இஸ்லாத்தில் மட்டும்; தற்கொலை ஆகுமென்று இருந்திருந்தால் கிணறுகளெல்லாம் குமறுகளால் நிரம்பி இருக்கும்'.

இஸ்லாத்திலே தற்கொலை மட்டும் செய்ய அனுமதியெனில் கிணறுகளெல்லாம் குமருகளால் மூடப்பட்டு இருக்கும். என ஒரு இஸ்லாமிய கவிஞன் பாடி காட்டுகிறான். திருமணத்திற்கு முன்பாகவும் வரதட்சணை திருமணத்திற்கு பின்பும் வரதட்சணை... காரணம் கணவனே..!
மனைவியினுடைய உரிமைகளை எந்த கணவன் மதித்து செயல்படுகிறானோ அந்த இல்லறமே மகிழ்வான நல்லறமாக இருக்கும் ஆக நடுநிலை தவறாத நடுவரவர்களே! இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பவர்கள்.....
கணவனே!.... கணவனே!.... கணவனே!....
என்று கூறி பெறுகிறேன் விடை தருகிறேன் ஸலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...