15 மே, 2012

நபிவழியில் நம் நடைமுறை


சுன்னத்
லகில் எத்தனையோ புரட்சியாளர்கள் சீர்திருத்தவாதிகள் தோன்றியுள்ளனர் மறைந்துள்ளனர். அவர்களில் யாரும் தன் மரணத் தருவாயில் இப்படிச் சொன்னதில்லை: எனக்குப் பின்னால் என் வாழ்வை விட்டுச் செல்கிறேன் அதை அப்படியே பின்பற்றுங்கள் வெற்றி பெறலாம். இப்படி சொல்லும் அளவுக்கு யாருடைய வாழ்வும் முழுத் தகுதிள்ளதாக அமையவில்லை. ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தன் இறுதி காலத்தில் இப்படி கூறினார்கள்: நான் இரண்டை உங்களிடம் விட்டுச் செல்கிறேன் ஒன்று அல்லாஹ்வின் திருமறை மற்றொன்று எனது வழிமுறை இவற்றை யார் பின்பற்றி நடக்கிறாரோ அவர் வழிதவறமாட்டார்.
என் வாழ்வு உங்களுக்கு ஒரு முன்மாதிரி அதை பின்பற்றினால் வெற்றி உண்டு என்று உறுதியாக உரைக்கிற தகுதியும் நேர்மையும் அண்ணலாருக்கு நிச்சயம் உண்டு. அந்தளவுக்கு அவர்களின் வாழ்வு அமைந்திருந்தது என்பதை  நாம் மட்டும் கூறவில்லை. மாற்றுமத அறிஞர்களும் ஒப்புக்கொள்கிற ஒரு உண்மை.
பியவர்களின் வழிமுறையை சுன்னத்தை பின்பற்றுமாறு அல்லாஹ் குர் ஆனில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வலியுறுத்துகிறான். அப்படி பின்பற்றினால் உங்களுக்கு நேவழியும் வெற்றியும் உண்டு என வாக்களிக்கிறான்.
وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ ([سورة الأعراف: ١٥٨
மற்றொரு இடத்தில் அல்லாஹ்வை நேசிப்பதின் அடையாளமே தூதரைப் பின்பற்றுவதுதான் என்கிறான்.
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ} [سورة آل عمران: ٣١]
ஒருவர் அல்லாஹ்வை பிரியப்படுவதாகக் கூறிகொண்டு உண்மையில் நபியைப் பின்பற்றவில்லையானால் அவரது கூற்று பொய்யாகிறது.
நகம் வெட்டுவது எப்படி என்பதிலிருந்து நாடாளுவது எப்படி என்பது வரை
சிறுநீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனம் அமர்வது வரை எல்லாவற்றிற்கும் சரியான வழிகாட்டல் வள்ளல் நபிகளாரிடம் உண்டு.

பைத்துல் முகத்தஸை மீட்க உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஒரு படை அனுப்பப்பட்டது. அந்தப் படை முகாமிட்டிருந்தபோது எதிரிகள் கடும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். வந்திருப்பவர்கள் முஸ்லிம்கள். முஹம்மது நபியின் தோழர்கள். அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றி அவர்களின் காலடியில் பணிந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் எப்படி அவர்களைத் தோற்கடிப்பது? அதற்கு ஒரு வழி உண்டு. முஸ்லிம்கள் முன்னேறி வரும் வழியில் அழகான பெண்களை அலங்கரித்து அரை நிர்வாணமாக அலையவிட்டால் அவர்களின் கவனம் சிதறும் படையும் சிதறும் இறையுதவி அவர்களுக்கு தடைபடும். மிக சுலபமாக அவர்களை வென்றுவிடலாம்.
எதிரிகளின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்ட முஸ்லிம்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்தியவர்களாக நடந்தார்கள் அதனால் அவர்கள் பைத்துல் முகத்தஸை வெற்றிகொள்ள முடிந்தது. பார்வைய தாழ்த்தி நடக்கும் ஒரு சுன்னத்தை அமுல்படுத்தியதால் ஒரு மாபெரும் வெற்றி அவர்களுக்கு கணிந்தது.

அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த ஆரம்பக் காலக்கட்டம் அது அந்த நேரம் மது தடை செய்யப்படவில்லை. அபூதல்ஹாவின் வீட்டில் விருந்து நடந்துகொண்டிருந்தது. அனைவரின் கின்னங்களிலும் நான் மதுவை ஊற்றி நிரப்பிவிட்டேன். அதை அவர்கள் அருந்துவதற்காக வாயில் வைத்த வினாடி திடீரென ஒருவர் ஓடி வந்தார் சொன்னார்: நான் முஹம்மது நபி ஸல் அவர்களிடமிருந்து வருகிறேன். மது ஹராமாக்கப் பட்டுவிட்டது. இதைக் கேட்ட மறுவினாடி வாயிக்கு கொண்டு சென்று அத்தனை பேரும் உடனே அதை வீசி எறிந்தார்கள் அத மாத்திரமல்ல.. சேமித்துவைத்திருந்த மது பீப்பாய்கள் தெருவில் கொட்டப்பட்டு ஆறாக ஓடியது. வந்து சொன்னவர் யார்? உண்மையில் நபிதான் சொல்லி அனுப்பினார்களா? அப்படியே சொல்லி அனுப்பினாலும் மது ஹராமா அல்லது மக்ரூஹா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டும் கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டும் இருக்கவில்லை. நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மொடாக் குடியர்கள். குடியிலே பழக்கப்பட்டு அடிமையாகிப் போனவர்கள்; நபியிடமிருந்து வந்த ஒரே ஒரு வார்த்தைக்குப் பிறகு அப்படியே மாறிப் போனார்கள் என்றால் நபியின் சொல்லை எந்தளவு அணுகளவும் பிசகாது பின்பற்றினார்கள் என்று எண்ணிப் பார்க்கவேண்டும்?

رأى رسول الله صلى الله عليه وسلم خاتماً في يد أحد الصحابة فنزعه من يده ورماه على الأرض 
ثم قال ((يعمد أحدكم إلى جمرة من نار فيضعها في يده))ثم ذهب فقال له أناس 
خذ الخاتم وبعه وإستنفع بقيمته فقال لاوالله لاآخذه وقد طرحه صلى الله عليه وسلم
ரு தோழர் கைவிரலில் தங்க மோதிரம் அணிந்திருந்தார். நபியவர்கள் பார்த்தார்கள் முகம் மாறியது கண்கள் சிவந்தது நரகத்தின் துண்டை உமது கையில் காண்கிறேனே? என்று கூறி அதை கழற்றி எறிந்தார்கள். நபி சென்றுவிட்டார்கள். அவர் அதை எடுக்காமல் சென்றார். மற்ற தோழர்கள் கேட்டனர் நபியவர்கள் கூறியது ஆண்களாகிய நாம் அணியக்கூடாது என்பதுதான் இதை நீர் எடுத்து சென்று மற்றவகையில் பயன் பெற்றுக்கொள்ளலாமே (உமது வீட்டுப் பெண்களுக்கு அணிவிக்கலாம் அல்லது அதை விற்கலாம்) அதற்கு அந்த தோழர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ம்ஹூம். எனது உயிருக்குயிரான கண்மணி நாயகம் அவர்கள் அதைத் தூக்கி எறிந்ததற்குப் பின்னர் அது தங்கமாக இருந்தால் என்ன? வைரமாக இருந்தால் என்ன? அதை நான் தொடமாட்டேன்.

யரமாக வீடு கட்டியிருந்த ஒரு தோழர் நபிக்கு சலாம் சொல்ல நபியவர்கள் பதில் சலாம் கூறாமல் திரும்பிக்கொள்ள  அவர்  பதறிகொண்டு மற்ற தோழர்களிடம்,''என்ன நடந்தது? நபியவர்கள் எனக்கு பதில் சலாம் கூறவில்லையே? என்று விசாரிக்க தோழர்கள் கூறினார்கள் : நபியுடன் நாங்கள் தெருவில் நடந்த சென்ற்போது உயரமான உனது வீட்டைப் பார்த்து இது யாருடைய வீடு என கேட்டார்கள் நாங்கள் உம்முடைய பெயரைக் கூறினோம் இதுதான் நடந்தது. அந்த தோழர் புரிந்துகொண்டார் நபிக்கு இந்த உயரம் பிடிக்கவில்லை. உடனே சென்றார் அந்த வீட்டை தரைமட்டமாக்கிவிட்டார். நபியவர்கள் வீட்டை இடிக்கச் சொல்லவில்லை; உயரத்தைக் குறைக்கும்படி நபி கூறும்வரை அவர் காத்திருக்கவும் இல்லை. ஒரு விஷயம் நபிக்கு விருப்பமில்லையென்று மனக் குறிப்பால் அறிந்தால்கூட போதும் அருமைத் தோழர்கள் அதை உடனே நிறைவேற்றுவார்கள்.

ரம்பத்தில் கஃபாவை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள். இடையில் சில மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழும்படி இறைக்கட்டளை. ஒருநாள் மீண்டும் கஃபாவை நோக்கியே தொழும்படி உத்தரவு வந்தது. நபி உடனே அதை அமுல்படுத்தினார்கள். நபியுடன் மஸ்ஜிதுன் நபவியில் தொழுதுவிட்டு ஒரு தோழர் இன்னொரு பள்ளிக்கு யதார்த்தமாக வந்தார். அங்கே அஸர் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இவர் சப்தமிட்டுக் கூறினார்: ''அறிந்துகொள்ளுங்கள் நான் நபியுடன் தொழுதுவிட்டுவருகிறேன். கிப்லா மாற்றப்பட்டுவிட்டது.'' 
இந்த வார்த்தையைக் காதில்வாங்கியதும் இமாமும் பின் தொடர்ந்து தொழுதவர்களும் அப்படியே திரும்பி கஃபாவை நோக்கி மீதி தொழுகையை தொடர்ந்தனர். இந்த தொழுகையை முடித்துக் கொள்வோமே அடுத்த தொழுகைக்கு அதைப் பின்பற்றிக்கொள்வோமே என்று கூட தாமதிக்கவில்லை. நபியின் உத்தரவு உடனே நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்பதில் அருமைத் தோழர்கள் கொண்டிருந்த ஆர்வத்திற்கு அளவே இல்லை. 
பூ அலி என்ற இப்னு சீனா ஒரு மாமேதை. மருத்துவ துறைக்கு அவர் அவர் ரோல்மாடல் அவர் எழுதிய நூல்களைப் பலநாடுகளில் மருத்துவத் துறையில் பாடப் புத்தகமாக வைத்துள்ளனர். இத்தகைய ஒரு பேரறிஞர் அடிக்கடி நபி கூறினார்கள் நபி இதை அறிவித்தார்கள் என்று மேற்கோள் காட்டுவார் அவரின் ஒரு சீடர் இதை ஆட்சேபித்தார். நீங்கள் ஒரு பெரும் மாமேதை. அப்படியிருக்க அந்த நபியைப் பின்பற்றவேண்டுமா? என்று கேட்டார். உடனே இப்னு சீனா அதைக் கடுமையாக கண்டித்தார்
பின்னர் ஒருநாள் தம் மாணவருடன் இஸ்ஃபஹான் சென்றிருந்தபொழுது ஓரிரவு கடும் குளிராக இருந்தது. தன் மாணவரிடத்தில் இத்தனை மணிக்கு என்னை எழுப்பி உளூ செய்ய தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிடு என்று கூறினார். அந்த மாணவர் கடும் குளிரினாலும் அசதியினாலும் அசந்துவிட்டார்ஃபஜ்ரு நேரத்தில் பள்ளியிலிருந்து வைகறைத் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. அப்பொழுது இப்னு சீனா தம் மாணவரை நோக்கி, ''பார்த்தீரா? நான் ஒரே ஒருமுறை உம்மை எழுப்ப சொன்னேன் நீர் செய்யவில்லை. ஆனால் அந்த முஅத்தினோ நானூறு ஆண்டுகளுக்கு முன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிட்ட கட்டளையை சிரமேற்றாங்கி இந்த குளிரிலும் பள்ளிவாயிலுக்கு வந்து தினமும் பாங்கு சொல்கிறார். இறைத் தூதர்களின் தூதுத்துவத்திற்கும் சாமானிய மனிதர்களின் தத்துவக் கலைக்கும் இதுதான் வேறுபாடு''.


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புள்ள இஸ்மாயீல், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள ஆலிம் பெருந்தகை அவர்களே, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
      கட்டுரை பற்றி ஏதேனும் குறை இருந்தாலும் தாராளமாக தாங்கள் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்திக் கொள்கிறேன்.

      நீக்கு
  3. ماشاء الله
    அருமையான கட்டுரை
    அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...