31 மார்ச், 2012

டிவி முஸீபத்தே!-2



நடுவர் அவர்களே! ஒட்டகத்தின் கழுத்தைப் பார்த்து ஒருவன் கேட்டானாம்: ஒட்டகமே ஒட்டகமே..ஏன் உன் கழுத்து கோணலாக இருக்கிறது என்று. அதற்கு ஒட்டகம் சொன்னதாம்: அட பைத்தியக்காரா..எனது உடலில் எந்த பகுதிதான் நேராக இருக்கக் கண்டாய்? என்று சொன்னதாம்.
 அதுபோல நடுவர் அவர்களே! ஒட்டகம் என்றாலே கோணல்தான். சினிமா என்றாலே சீரழிவுதான். அதிலே நல்ல சினிமா கெட்ட சினிமா என்று ஏன் பிரிக்கவேண்டும்? கழுதை விட்டையில் முன்விட்டை என்ன? பின்விட்டை என்ன? எல்லாம் விட்டைதானே!


உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன்: சினிமாவைப் பார்த்து சீர்திருந்தியதாக ஒரு வரலாறு உண்டா? படம் பார்த்து முன்னுக்கு வந்ததாக சரித்திரம் உண்டா? சினிமாப் பார்த்து சீரழிந்ததாக எத்தனையோ வரலாறுகளை என்னால் காட்டமுடியும். ஒன்றா இரண்டா? நடுவர் அவர்களே.
குறித்துக் கொள்ளுங்கள்.
 இதோ தினத்தந்தியிலே வந்த செய்தி: பம்பாயில் இரண்டு சிறுவர்கள் ஒரு பணக்காரனின் குழந்தையைக் கடத்தி வைத்துக்கொண்டு ரூபாய் பத்தாயிரமும் தங்கச் செயினும் தந்தால்தான் விடுவோம்; தராவிட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவோம்'' என்று ஃபோனில் மிரட்டினார்கள். போலீஸ் குறிவைத்து அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் சொன்ன வாக்குமூலம் என்ன தெரியுமா?  ''கேல்கேல்மேன்' எனும் திரைப்படம் பார்த்தோம்; அதில் இப்படித்தான் மிரட்டி பணம் பறிக்கும் காட்சியைக் கண்டோம். அது எங்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது; நாமும் இப்படி செய்தால் பெரிய செல்வந்தனாக ஆகலாமே என்றுதான் செய்தோம்; ஆனால் மாட்டிக்கொண்டோம்'' என்றார்களாம்.

 இதோ இன்னும் கேளுங்கள்: டி.வி படத்தால் வந்த விபரீதங்கள்: அமெரிக்காவிலே பாஸ்டன் நகரிலே ஐந்து வயது சிறுவன் இரண்டு வயது பெண் குழந்தையை கத்தியால் குத்திக் கிழித்துவிட்டான். ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? ''இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு படங்கள் பார்த்தேன் அதில் அதிகமான கத்திக்குத்து சம்பவங்களும் வன்முறை வெறியாட்டங்களும் அடிக்கடி காண்பிக்கப்பட்டது. இதேபோல் நாமும் செய்து பார்த்தால் என்ன? என்று விளையாட்டாக செய்தேன்; வினையாகிவிட்டது என்றான்.
பார்த்தீர்களா என் சமுதாயமே! நன்முறையில் வாழவேண்டிய பிள்ளைகள் வன்முறையில் வாழ நினைத்ததற்கு என்ன காரணம்?

எனக்கு முன் பேசியவர் டி.வியிலே காட்டப்படும் விளையாட்டுகளைப் பார்த்து வீரம் வரத்தானே செய்கிறது என்று வீராப்பாய் பேசிவிட்டுப் போயிருக்கிறார். நான் கேட்கிறேன்: டி.வியிலே விளையாட்டுகளைப் பார்த்து வீரம் வருகிறதோ இல்லையோ வெறித்தனம் வருகிறது.


வெறித்தனம் வருகிறது:

நடந்த சம்பவம் ஒன்று:  உலகக் கோப்பையை இந்தியா பெறுமா? பாக்கிஸ்தான் பெறுமா? என்று இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சூடான வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். படுகாஅயம் அடைந்த நாசிர் என்பவர் ஆஸ்பத்திரி கொண்டும் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். திண்மனியிலே வந்த செய்தி. விளையாட்டு தேவைதான்; அதற்காக இவ்வளவு வெறித்தனம் தேவையா? இதை உருவாக்கியது எது? பாலாய்ப்போன டி.வி.தானே.

 பைத்தியமே பிடித்துவிடுகிறது:
அதாவது பரவாயில்லை. சில நேரம் பைத்தியமே பிடித்துவிடுகிறது இந்த டி.வி.யைப் பார்த்து. டி.வி.யிலே ஹாக்கி போட்டியை ரசித்துக்கொண்டிருந்தார் ஒரு ரசிகர். அமெரிக்கா கோல் போட்டபோது சந்தோஷம் தாங்க முடியாமல் என்ன செய்வது எனப் புரியாமல் தன் கையில் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாராம். 1998-ல் தினமணியில் வந்த செய்தி. விளையாட்டில் கூட விபரீதத்தை விதைக்கின்ற இந்த டிவி தேவைதானா? கூறுங்கள் நடுவர் அவர்களே கூறுங்கள்.

சில பேர் கூறுவார்கள்: சினிமாக்கள்தானே சீரழிக்கிறது? சினிமாவை விட்டுவிட்டு சீரியல்களைப் பார்க்கலாமே! நாடகங்களில் நல்ல கருத்தும் வருகிறதே. அதைப் பின்பற்றலாமே! என்றெல்லாம் பசப்புகிறார்கள். பாருங்கள் நான் இப்படிச் சொன்னவுடன் தாய்க்குலங்கள் எல்லாம் தலையாட்டுகிறார்கள். எந்தள்வுக்கு அவர்களுக்கு நாடகங்கள் மேல் நம்பிக்கை. சாப்பிட மறந்தாலும் மறப்பார்கள்.. நாடகம் பார்க்க மறக்கமாட்டார்கள். நாடகங்களில் பெரும்பாலும் என்ன வருகிறது? 
மாமியாரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்?
மருமகளை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தலாம்?
கணவனுக்கு எப்படியெல்லாம் மாறு செய்யலாம்?
மனைவிக்கு எப்படியெல்லாம் துரோகம் செய்யலாம்
?
இதுதானே அதிகமாக காட்டப்படுகிறது? இந்த கன்றாவியை எல்லாம் கண்டிப்பாக பார்க்கத்தான் வேண்டுமா? பார்க்காவிட்டால் பசியெடுக்காதா? தூக்கம் வராதா? என்ன கொடுமை இது? 
  • நல்ல நாடகம் இண்ட்ரெஸ்டா பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
  • கட்டிய கணவன் வந்தாலும் கண்டுகொள்வதில்லை.
  • உற்றார் உறவினர் வந்தாலும் உபசரிப்பதில்லை; 
  • நல்ல நண்பர்கள் வந்தாலும் நலம் விசாரிப்பதில்லை; 

ஏண்டா இந்த சனியன்கள் இந்த நேரத்தில் வந்தார்கள் என்று ஏகப்பட்ட எரிச்சலோடு எரிமூஞ்சியைக் காட்டுகிறார்கள். பார்த்தீர்களா இந்த டி.வி. வந்து நம்மை எவ்வளவு பெரிய பாவியாகிவிட்டது? இப்பொழுது சொல்லுங்கள் டி.வி நிஃமத்தா? முசீபத்தா? நிச்சயமாக முசீபத்துதான் என்று கூறி என்னுரைக்குத் திரையிடுகிறேன். 


இது தொடர்பான இதர பதிவுகள்:






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...