27 மார்ச், 2012

திருத்தப்படவேண்டிய திருமணச் சடங்குகள்-நாடகம்1



''அய்யா தரகரே.. இங்கே வாங்க எம் பையன் பாஷாவுக்கு ஒரு நல்ல பொண்ணா பாருங்க!''

''அப்படியா உங்க பையன் என்ன செய்கிறார்?''

''என்னய்யா இப்புடபொசுக்குன்னு கேட்டுப்புட்டே. எம்பையன் ஒரு பெரிய  வி..பி ய்யா!''

''வி..பி.ன்னா?''

''V...I...P... வேலை இல்லா பட்டதாரி''
.
''அடத்தூ..வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கான்னு சொல்லுங்க''

''அட ஆமாய்யா. யோவ் தரகரே எம் பையனுக்கு நீ பாக்குற எடம் பெரிய எடமா இருக்கணும்''

''பெரிய எடம்னா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்துல குப்பைக் கொட்டுற இடம் இருக்கே அது போதுமா?''

''யோவ் அதில்லைய்யா. பெரிய எடம்னா பசையுள்ள பார்ட்டி.''

''ஓ பசையுள்ள பார்ட்டியா?''

''அதேதான். இப்பவாவது புரிஞ்சிட்டியே போ.. போய் பார்த்துட்டு வா!''

(தரகர் தனக்குள் சொல்லிக் கொள்கிறார்):
'பசையுள்ள பார்ட்டிய எங்கே போய் தேடுறது..
ஆங். அந்தா இருக்கார் பசையுள்ள பார்ட்டி.'
 (பக்கத்தில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனை இழுத்து வருகிறார்)

''யோவ் என்னைய்யா போஸ்டர் ஒட்டுறவன இழுத்துக்கிட்டு வாறே?''

''நீங்கதான் பாய் கேட்டீங்க.. பசையுள்ள பார்ட்டின்னு. அதான்!''

''அய்யோ உன்னோட பெரிய வம்பாப் போச்சுய்யா. போயி நல்லா பணக்கார இடமாப் பார்த்துட்டு வா, போ!''

''சரிங்க பாய்.''

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து )
''பாய்.. ஒரு பெரிய இடம் சிக்கியிருக்கு. அந்த ஆளுக்கு 2 பொண்ணு. பெரிய பொண்ணு கொஞ்சம் கருப்பாத்தான் இருக்கும்.. ஆனா 2 லட்சம் தர்ராங்களாம். அடுத்த பொண்ணு அதைவிட கருப்பா இருக்கும். ஆனா 5 லட்சம் தர்ராங்களாம்.. நான் எதைப் பார்க்கட்டும்?''

''அப்படின்னா அதைவிட இன்னும் கருப்பா பாரு!''

''அடத்தூ.. நீயெல்லாம் ஒரு மனுஷனா?''

''சரி சரி. கோவிச்சுக்காதேய்யா. ரொம்ப வேணாம். ஒரு 2 லட்சம் 20 பவுன் சிம்பிளா ஒரு இடம் பாருய்யா.''

''இது ஒனக்கு சிம்பிளா? 2 லட்சம் 20 பவுன் என்பது உனக்கு சிம்பிளா?''

''யோவ்.மொறப்படிப் பார்த்தா நான் 10 லட்சம் கேட்கணும். ஏதோ போனாப் போகட்டும்னு 2லட்சம் கேக்குறேன்.''

''என்னது 10 லட்சமா? எப்படி?''

''ஆமாய்யா. எம் பையனை பெத்து வளத்து ஆளாக்கியிருக்கேன்ல..அதுக்கு ஒரு 7 லட்சத்த போடு. படிக்க வச்சு பட்டதாரி ஆக்கியிருக்கேன்ல.. அதுக்கு ஒரு 2 லட்சத்த போடு. நாளைக்கு அவனுக்கு கல்யாணம்னா விருந்து வைக்கனும், குரூப்புக்காரனுக்கு பார்ட்டி வைக்கனும்.. அதுக்கு ஒரு 1 லட்சத்த போடு. ஆக கொறஞ்சது 10 லட்சம் கேட்கணும். ஏதோ போனாப் போகட்டும்னு 2லட்சம் கேக்குறேன்.''

''ஏன்யா. இதெல்லாம் ஒரு பெத்த பிள்ளைக்கு தகப்பன் செய்யவேண்டிய கடமை. கடமைக்குப் போய் கணக்கு பாக்குறீயே, இது நியாயமா?''

''யோவ். நியாயம் அநியாயமெல்லாம் இருக்கட்டும், சொன்ன வேலையை செய்யா! கமிஷன் தர்றேன்.''

''கமிஷனா.. அப்ப ஓகே!''
                                     (திரை மூடித் திறக்கிறது)


                                       காட்சி-2 

சரவணன் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தில் கரீம் பாய் இஸ்லாமை எடுத்துச் சொல்கிறார் :

ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் மக்களே! நாம் அனைவரும் சகோதரர்கள். ஆதம் ஹவ்வா என்ற ஒரு தாயின் மக்கள் நமக்குள் குலத்தாலோ நிறத்தாலோ ஏற்ற தாழ்வுகள் இல்லை.
 நாம் அனைவரும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனுக்கு முன்னால் அரசன் ஆண்டி ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லோரும் சமமே!
சரவணன் :
ஐய்யா. இந்த சமவுரிமைக்காகத்தானே நாங்க ஏங்குறோம். எங்கள ஒரு மனுஷனாவே மதிக்கமாட்டேங்குறாங்கய்யா. நாங்க தொட்டா தீட்டு; பட்டா தீட்டுங்குறாங்க. உயர்ஜாதி குடியிருக்கும் தெருவுல நாங்க நடக்கக்கூட உரிமை இல்லய்யா. நடந்தா கால வெட்டுறாங்க தட்டிக்கேட்டா கழுத்த வெட்டுறாங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையாங்க?
கரீம் பாய் :
தம்பி..  நம்ம நாட்டுல எத்தனையோ நல்லவங்க வந்து நச்சுன்னு மண்டையிலே ஒரைக்கிற மாதிரி நல்லாத்தான் சொல்லிட்டுப் போனாங்க. சாதிகள் இல்லையடி பாப்பா அப்படின்னு பாரதியார் பளிச்சின்னு சொன்னார். தீண்டாமை ஒரு பாவச்செயல் அப்படின்னு நாட்டுத் தந்தை நல்லா சொன்னாரு. சொல்லி என்ன செய்ய? இன்னமும் இந்த நாட்டுல பல கிராமங்கள்ல தீண்டாமைக் கொடுமை தலைவிரிச்சுத்தானே ஆடுது? பல டீக்கடைகள்ல இரண்டு டம்ளர் முறை இன்னும் இருக்கத்தானேசெய்யுது? மேல்ஜாதிக்கு ஒன்னு கீழ் ஜாதிக்கு ஒன்னுன்னு.
சரவணன் :
ஏம் பாய்.. இதுக்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா?
கரீம் பாய் :
ஏன் இல்லை? பெரியார் முதல் பெரியார்தாசன் வரை சொன்ன ஒரே தீர்வு என்ன தெரியுமா? இன இழிவு ஒழிய இனிய மருந்து இஸ்லாம் ஒன்றுதான். எந்த சாதியா இருந்தாலும் கலிமா சொன்ன மறு நிமிடமே கண்ணியம் வந்துடும்; மரியாதை கூடிடும்; நீயும் மானமுள்ள ஒரு மனுஷனா தலை நிமிர்ந்து வாழலாம்
சரவணன் :
அப்படியா பாய்! அப்படின்னா இப்பவே சொல்றேன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.

கரீம் பாய் :
ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.!
சரவணன் :
கரீம் பாய்.. எனக்கு கிடைத்த இந்த ஹிதாயத் என் மனைவி மக்களுக்கும் கிடைக்கனும். அவங்களும் நரகத்தை விட்டும் விடுதலையாகனும்.
கரீம் பாய் :
நிச்சயமா. அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்; போய் உங்க குடும்பத்துக்கும் கலிமா சொல்லிக் கொடுங்க.. போங்க.''

சரவணன் சலீமாக மாறிய சந்தோஷத்துடன் வீடு சென்றார்.

(அடுத்த நாள்....
சலீமும் கரீமும் மீண்டும் சந்திக்கின்றனர்)

''அஸ் ஸலாமு அலைக்கும் கரீம் பாய், எப்படி இருக்கீங்க?

அலைக்குமுஸ் ஸலாம் சலீம் பாய், அல்லாஹ்வுடைய கிருபையிலே நல்லா இருக்கேன். அது சரி எங்கே கிளம்பிட்டீங்க?

தொழுகத்தான்.. பள்ளிக்குப் போய்க்கிட்டு இருக்கேன். பாங்கு சொல்ல பத்து நிமிஷந்தானே இருக்கு? முன்கூட்டியே பள்ளிக்குப் போய் உளூ செய்துட்டு உட்காருவது நல்லதுதானே கரீம் பாய்?

அடடா சுப்ஹானல்லாஹ். பரம்பரை முஸ்லிம்கிட்டயே இந்த பழக்கம் இல்லையேநேத்துத்தான் கலிமா சொன்னீங்க? இன்னிக்கே இவ்வளவு ஈமானா? மாஷா அல்லாஹ். சரி வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்.

(பள்ளிக்குள் நுழைகின்றனர்)

''சரி பள்ளிக்குள் வந்தாச்சு.. வாங்க முன் சஃப்புக்கு போயிரலாம்''

''முன் சஃப்புகா? நானா?''

''ஏங்க சலீம் யோசிக்கிறீங்க? எப்ப கலிமா சொன்னீங்களோ அப்பவே உங்களுடைய பழைய அடையாளமெல்லாம் போயிருச்சு. இப்ப நீங்க ஒரு உயர்ந்த முஸ்லிம்; நீங்க விரும்பினா முதல் வரிசையில மட்டுமல்ல அதுக்கு மேலே இமாமாக கூட நிக்கலாம்''

''என்னது இமாமாவா?''

''ஆமாம் முறைப்படி ஓதிப் படிச்சிட்டு இப்பவே நீங்க இமாமா கூட இருந்து எங்களுக்கு வழிகாட்டலாம். நான் ஏற்கனவே சொல்லலையா? அல்லாஹ்வுக்கு முன்னாடி அரசனும் ஆண்டியும் சமம்னு.''

சலீம் தொழுதுவிட்டு இறைவனிடம் இறைஞ்சுகிறார்:

''யா அல்லாஹ்.. சாக்கடையை விட்டுட்டு சத்தியத்திற்கு வந்துட்டேன்; உனது உண்மையான மார்க்கத்தை ஒப்புக்கொண்டு விட்டேன்.எனது உறவினர் என்னை உதறிவிட்டனர்.எனது பங்காளிகள்கூட என்னைப் பகைத்துவிட்டனர். இப்பொழுது முழுமையாக உம்மேல தவக்குல் வச்சிருக்கேன். நீதான் கடைசி வரைக்கும் என்னைக் காப்பாத்தனும். ஆமீன்.''
கரீம் பாய் :
ஆமீன்; ஆமீன்; யாரப்பல் ஆலமீன். கவலைப் படாதீங்க சலீம் பாய். உங்களுக்கு உற்ற துணையா நாங்க இருக்கோம். கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்; வாங்க நம்ம தலைவரைப் போய் சந்திப்போம்.

4 கருத்துகள்:

  1. மாஷா அல்லா!

    உங்களுடைய நகைசுவையுடன் கூடிய-
    நாடகத்தை படித்ததில் மிக்க மகிழ்ச்சி-
    நீங்க எழுதியவற்றில் சுழற்றி அடித்ததில்-
    எனாக்கும் வலித்தது -
    நான் என்ன யோக்கியனா?
    திருந்தனும்!
    மேலும் மிச்ச நாடகத்தை பார்டுது விட்டு-
    பின்னூட்டம் போடுகிறேன்!
    வீடியோ பதிவு கிடைத்தாலும் போடுங்கள்!
    அல்லாஹ் உங்களுடைய-
    செயல்களை பொருந்தி கொள்வானாக!
    ஆமீன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடகம் வீடியோ எடிட்டிங் நடக்குது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் youTube -ல் பதிவேற்றி ப்ளாக்கருக்கு பகிர்வேன் சீனி.. உங்களின் கருத்துதான் என்னைப் போன்றவர்களை எழுதத் தூண்டுகிற உற்சாக பானம்..நன்றி.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...