06 டிசம்பர், 2012

மரணத்தின் மடியில் மனிதனின் நிலை


ஜீனா துமாரா ஜீனா
மர்னா துமாரா ஜீனா
கியா க்ஹூப் ஹே துமாரா
முஃமினே..
உன் வாழ்வும் வாழ்க்கைதான்உன் மரணமும் உனக்கு வாழ்க்கைதான்என்ன ஒரு அதிர்ஷ்டம் உனக்கு?
ஒரு நல்ல முஃமினைப் பொறுத்தவரை இறப்பு அவருக்கு இழப்பல்ல என்பதை அற்புதமாக படம்பிடித்துக் காட்டும் அல்லாமா இக்பாலின் வரிகள் இவை.


عن أبي قتادة بن ربعي أنه كان يحدث أن رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازة فقال مستريح ومستراح منه قالوا يا رسول الله ما المستريح والمستراح منه فقال العبد المؤمن يستريح من نصب الدنيا والعبد الفاجر يستريح منه العباد والبلاد والشجر والدواب( صحيح مسلم)

நபிகள் ஸல் அவர்கள் தோழர்கள் புடைசூழ ஓரிடத்தில் அமர்ந்திருந்தபொழுது ஒரு ஜனாஸா பிரேதம் அவர்களைக் கடந்து சென்றது. நபியவர்கள் அதை சுட்டிக்காட்டி, 'இவர் ஓய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர்' என்றார்கள்.
இதன் பொருள் என்ன?
இறைநம்பிக்கை கொண்ட ஒரு நல்லடியார் இறக்கும்பொழுது இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் இறக்கும்பொழுது அவனிடமிருந்து மற்ற படைப்புகள் ஓய்வு பெற்று நிம்மதி அடைகின்றன.
சூஃபி ஞானி ஒருவர் இறக்கும் நேரம் முகம் மலர்ந்து சிரித்தார். அருகில் இருந்தவர்கள், 'இந்த நேரத்தில் சிரிக்கிறீர்களே'' என்றனர்.
'' நான் காதலிக்கும் இறைவனுக்கும் எனக்கும் இடையே ஒரு திரைதான் இருக்கிறது. அது விலகப்போகிறது. நான் எப்படி மகிழாமல் இருப்பேன்.?''
 கொடுங்கோல் அரசன் ஒருவன் ஒரு ஞானியைச் சந்தித்து, ''எனக்கு ஆசீர்வாதம் வழங்குங்கள்' என்றான்
நீ அதிகமாக தூங்கு'' என்றார் துறவி
அரசன் ஆச்சரியத்துடன் ''ஏன் அப்படி கூறுகிறீர்கள்?'' என்றான்.
'' நீ தூங்கும் நேரத்தில்தான் உன் குடிமக்கள் உன் கொடுமைகளிலிருந்து தப்பிக்கிறார்கள்.'' என்றார் துறவி.
அதுபோல தீயவர்களின் மரணம் மற்றவர்களுக்கு நன்மைதான்.


மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்கள்:
சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் பொருளைத் தேடுவதிலும் அதை செலவிடுவதிலும் மக்களைப் பெறுவதிலும் அவர்களைப் பராமரிப்பதிலுமே செலவழித்து அவைகளே தங்கள் லட்சியம் என்று அலைவார்கள். அவர்கள் தங்கள் மரணத்தை இழுபறியாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் இலட்சியத்தை நிறைவு செய்வதற்காக இன்னும் வாழத் துடிக்கிறார்கள். எனவே மரணத் தூதரின் அழைப்பை ஏற்காமல் போராடுகிறார்கள். இந்நிலையில் உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி திருக்குர்ஆன்
 والنازعات غرقا هي الملائكة الذين ينزعون نفوس بني آدم فإذا نزعوا نفس الكفار نزعوها بشدة، 

தோலை உறிப்பதுபோன்று கடினமாக இழுப்பார்கள் ''(79:01) என்று கூறுகிறது.

கடுகவெளி சித்தர் பாடுகிறார்:
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடியே
போட்டுடைத்தாண்டி!''

நந்தவனம் என்ற சுவனத்தில் பரம ஆனந்த்மாய் உலவி வந்த ஒரு உயிர் (ஆண்டி) நாலாறு(பத்து) மாதமாய் கருவில் இருந்துகொண்டு இறைவன் என்ற குயவனை வேண்டி ஒரு தோண்டியை(உடலை)ப் பெற்று அதில் புகுந்துகொண்டது. உடலில் புகுந்தபின் நேர்மையாக வாழாததால் அந்த உடலிலிருந்து இலகுவாக வெளியேறமுடியவில்லை. கூத்தாடிக் கூத்தாடியே வாழ்க்கையை விளையாட்டாகக் கழித்ததால் அந்த உயிர் உடைத்துக்கொண்டு வெளியேற நேரிட்டது.

  • இவ்வாறு மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்களால்தான் இந்த சமூகத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்படும்:

عن رسول الله صلى الله عليه وآله وسلم : ( يوشك أن تداعى الأمم عليكم تداعي الأكلة على قصعتها ، قال قائل منهم : من قلة نحن يومئذ ؟ قال : بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ، ولينزعن الله من عدوكم المهابة منهم ، وليقذفن في قلوبكم الوهن ! ! .
قال قائل : يا رسول الله وما الوهن ؟ قال : حب الدنيا وكراهية الموت )




இந்த நபிமொழியில் உலகத்தின்மீதான பற்றையும் மரணத்தின்மீதான வெறுப்பையும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
இது இரண்டும் ஒன்றுகொன்று தொடர்புள்ளது.
இறப்பின்போது நாம் இழப்பது என்ன?
பணத்தை..பந்தங்களை.. உறவுகளை.
அவற்றின் மீது நாம் பற்று வைக்காவிடில் இழப்பின் வருத்தம் நமக்கில்லை.
ரு சீனப் படைத் தலைவனுக்கு அவனது வீர சாகசத்தைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான கோப்பை. அவன் அந்த கோப்பையின் அழகில் மயங்கினான்;
அந்த கோப்பை வந்ததிலிருந்து மனைவி ஞபகம்கூட வருவதில்லை.
நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அதைக் கையில் எடுத்து தடவிப் பார்த்தான். மேலும் கீழும் கவிழ்த்து அதன் பூவேலைப்பாடுகளை ரசித்தான்.
ஒரு முறை அப்படி செய்யப்போய் கோப்பை அவனது கையிலிருந்து நழுவப் பார்த்தது. சட்டென்று பிடித்து அதற்குரிய இடத்தில் வைத்தான்.
மனப்பதட்டம் நிற்க வெகு நேரமாயிற்று. அதற்குப் பிறகு அதை எடுக்கவே அச்சமாக இருந்தது. எங்கே மேசை மீதுள்ள மற்ற பொருட்களை எடுக்கும்போது தவறி கோப்பையைத் தள்ளி உடைத்துவிடுவோமோ என்று அஞ்சினான்.
களம் பல கண்ட வீரன் அவன். இப்பொழுது ஒரு சின்ன கோப்பை அவனைக் கலங்கடித்தது.
இந்த நிலை நீடித்தால் தான் ஒரு மனநோயாளியாக மாறிவிடக்கூடும் என்று பட்டது. இதற்கு என்ன காரணம்?
பொருள்மீது தான் வைத்த அதீத பற்றுதான் தன்னை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது. அந்த கணமே கோப்பையை வீசி எறிந்தான். மூலையில் விழுந்து நொறுங்கியது. பணியாளை அழைத்து உடைந்த துண்டுகளை அப்புறப்படுத்தினான். இப்போது நிம்மதியாக இருந்தது.

உலகம் உள்ளங்கையில் இருக்கிற வரைக்கும் பிரச்சினைல்லை.
உள்ளத்துக்குள் இறங்கினால்தான் இறப்பின் மீதும் இழப்பின் மீதும் வருத்தம் வருகிறது.
دنیا ہات میں ہو دل میں نہ ہو

மரணத்தைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும்?
மரணத்தை வெறுக்கிறவர் கோழை.
இறைவனின் அழைப்பு எப்போது வந்தாலும் நான் தயார் என்ற மன உறுதி படைத்தவர்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடன் கழிக்கமுடிகிறது.
ரு செல்வந்தர் ஞானி ஒருவரை சந்தித்து ஆசி கேட்டார். ''எனக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்கள்'' என்றார்.
அந்த ஞானி கூறினார்:
தந்தை இறப்பு
அதன்பின் தனயன் இறப்பு
அப்புறம்
பேரன் இறப்பு
கேட்ட செல்வந்தருக்கு முகம் தொங்கிப் போயிற்று. என்ன இந்த ஆள் வாழ்வு வார்த்தை கேட்டால் இழவு வார்த்தையாக அடுக்குகிறாரே!
அந்த குரு விளக்கம் கூறினார்:
உண்மையில் இது சுப வார்த்தை. எல்லோரும் இறக்கத்தான் செய்கிறார்கள். அது இயல்பு. ஆனால் அகால மரணம் என்பது சங்கடம் இல்லையா? தான் இருக்க மகன் இறக்க நேர்ந்தால் தாங்கிக்கொள்ளமுடியுமா? தந்தையின் கண்முன்னே மகன் வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும். அவருக்கு அவன் பணிவிடை செய்யவேண்டும். தந்தை-மகன்-பேரன் என்று அவரவர் வாழ்ந்து வரிசையாக மரணமடையவேண்டும். இப்படி இயல்பாக அமைவது பெரிய விஷயம்' என்றார்.




மரணத்தை வரவேற்பவர்களில் இரு வகையினர் உண்டு.
1.விடாத வியாதினால் வாழ்வை வெறுத்து அல்லது துன்பம் துயரமும் தொடர்ந்து தாக்கியதால் விரக்தி அடைந்து செத்தாலும் பரவாயில்லையே என்று மரணத்தை வரவேற்பவர்களும் உண்டு.
2. மரணத்திற்கு அஞ்சாத மகான்கள்: உலகம் நிலையானதல்ல என்று புரிந்துகொண்டு நிலையான மறுமை வாழ்க்கைக்காக நிறைய சேகரித்துக்கொண்டு மனநிறைவோடு வாழ்பவர்கள் மரணம் வருகிறபோது மனம் கலங்கமாட்டார்கள். இவர்கள்தான் புத்திசாலிகள் என்று பூமான் நபி ஸல் கூறினார்கள்:
عن أبي يعلي شداد بن اوس_ رضي الله عنه_ عن النبي صلي الله عليه وسلم قال:  الكيس من دان نفسه، وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها، وتمني علي الله)) رواه الترمذي وقال صيح حسن
தன் வாழ்வை சுயபரிசோதனை செய்து மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கைக்கு நன்மைகளை சேகரித்தவர் அதிபுத்திசாலி ஆவார்.


மன்னர் ஹாரூன் ரஷீதின் அவையில் அறிஞர் பஹ்லூல் என்பவர் இருந்தார். விகடகவி மற்றுமல்ல...விவேகி. அவரிடத்தில் ஒருநாள் அரசர் ஒரு குச்சியைக் கொடுத்து உம்மிடம் இதை அமானிதமாக ஒப்படைக்கிறேன். இந்நாட்டில் உம்மைவிட மோசமான முட்டாள் யாரையாவது நீ சந்திதால் அவரிடம் இதை அன்பளிப்பாக வழங்குவீராக! என்றார். அரசரின் நோக்கம் இவரை நையாண்டி செய்து பார்ப்பது.
சில காலம் கழிந்தது. மன்னர் ஹாரூன் ரஷீது மரணப் படுக்கையில் கிடந்தார். அவரை நலம் விசாரிக்க பஹ்லூல் வந்தார்.
என்ன எப்படி இருக்கிறீர்கள் அரசரே!
பயணம் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்''     ''எங்கே பயணம்?''
''மறுமை நோக்கிப் பயணம்.''
''போய்விட்டு எப்பொது திரும்புவதாக உத்தேசம்?''
''பஹ்லூல்.. என்ன கேள்வி இது? இந்த பயணம் திரும்பா பயணம். மீள முடியா பயணம்.
''அப்படியா.. நீண்ட பயணம் என்றால் பயணத்திற்கான முன்னேற்பாடுகள் செய்துவிட்டீர்களா? பாதுகாப்புக்கு படைகளை அனுப்பிவிட்டீர்களா? பயணத்திற்கு தேவையான உணவு எல்லாம் தயாராக சென்றுவிட்டதா?
''என்னது முன்னேற்பாடா? அப்படி எதுவும் செய்யமுடியாத பயணம் இது. யாரையும் துணைக்கு அழைத்து செல்லமுடியாது. எதையும் எடுத்து செல்லமுடியாது. ''
''அப்படியா. மன்னா இதோ தாங்கள் அமானிதமாக தந்த இந்த தடியை தாங்களே பிடியுங்கள்.''
''ஏன் என்னிடம் தருகிறீர்கள் பஹ்லூல்?''
''திரும்பி வரக்கூடிய ஒரு சின்ன பயணத்திற்கே பல ஏற்பாடுகளை செய்வீர்களே.. பாதுகாப்பு படைகளையும் பயண உணவும் அனுப்புவீர்களே.. திரும்ப முடியா நீளமான மறுமைப் பயணத்திற்கு எந்த முன்னேற்பாடும் தங்களிடம் இல்லையே.. தங்களைவிட பெரிய முட்டாளை நான் கண்டதில்லை. எனவே இந்த தடியை வைத்திருக்க தாங்களே தகுதியானவர்.
இதைக் கேட்டதும் அரசர் அழுதார். ஆமான் பஹ்லூல்.. நீர் கூறியது உண்மை. உம்மை முட்டாள் என்று நினைத்தேன் ஆனால் நீர் ஞானி.


இரு சகோதரர்கள் இரண்டடி நிலத்திற்காக சண்டையிட்டுக்கொண்டனர்.
இவன் சொன்னான் இது எனக்குத்தான் சொந்தம்
அவன் சொன்னான்: ''இல்லை இது எனக்குத்தான் சொந்தம்
அந்த மண் அவர்களை நோக்கி சொன்னது:
அட மடையர்களா! நீங்கள் இருவரும் எனக்கு சொந்தம்

மாவீரன் அலெக்ஸாண்டர் உலகின் பெரும்பகுதிகளை எல்லாம் வென்றவர். அவர் படை இறக்கிய இடமெல்லாம் பணிந்தது. அந்த மாவீரன் மரணப்படுக்கையில் கிடந்தபொழுது மறக்காமல் சொன்ன மரண சாசனம்:
''என்னைப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்கிறபொழுது என் இரு கைகளும் திறந்த நிலையில் வெளியே நீட்டியபடி அடக்கம் செய்யுங்கள்
உலகின் பெரும்பகுதியை ஆண்ட மாவீரன் இந்த உலகை விட்டுப் பிரிகிறபோது ஒரு பிடி மண்ணைக்கூட அள்ளிச் செல்லமுடியவில்லை என்று உலகம் உணர்ந்துகொள்ளட்டும்''



விரக்தி அடைந்து மரணத்தை வரவேற்பவர்கள்: 

விறகு வெட்டி ஒருவன் தலையில் விறகுச் சுமையுடன் மனதில் பாரத்துடன் மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான் சே.. இது ஒரு வாழ்க்கையா? விடிவதற்குமுன் வீட்டைவிட்டு வெளியாகி நடந்து கல் முள்களைக் கடந்து காட்டுக்கு சென்று மரத்தை வெட்டி சாய்த்து இலைகளை நீக்கி விறகை சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. பின்னர் ஒட்டிய வயிற்றுடன் அதை சுமந்து வந்து விற்றாலும் அரைவயிற்றுக்கும் காணுவதில்லை. இவ்வாறு சிந்தித்துக்கொண்டு வந்த அவனுக்கு தலைச் சுமையை சற்று இறக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டும்போல் தோன்றியது. எனக்கு சாவு வராதா இந்த பிழைப்பிலிருந்து விடுதலை கிடைக்காதா? என்று அவன் நாவு கூறிக்கொண்டது. தலைச் சுமையும் இறங்கியது. அப்போது அவன்முன்னால் ஒருவர் தோன்றினார். எதிர்பாராத அந்த மனிதரை கண்ட விறகுவெட்டி நீ யார்? என்று கேட்டான் நீதானே என்னைக் கூப்பிட்டாய் நீ அழைத்த சாவைத் தருபவர் நான்தான்'' என்று வந்த மனிதர் கேளியாக கூறினார். உடனே விறகுவெட்டி சுதாரித்துக்கொண்டான். உன்னை அழைத்தது உண்மைதான். ஆனால் எனக்க்கு சாவைத் தருவதற்கல்ல; இந்த விறகுக் கட்டை என் தலையில் தூக்கிவைப்பதற்காக கூப்பிட்டேன் என்றான்
இந்த கதையில் காணப்படும் விறகுவெட்டியின் வாய்வார்த்தை வேறாக இருந்தாலும் அவன் மனம் விரக்தியையே அடைந்திருக்கிறது. அந்த விறகுவெட்டியைப் போன்று பலரை நாம் நிஜ வாழ்க்கையிலும் சந்திக்கலாம்.

தொடரும்...


8 கருத்துகள்:

  1. மௌலானா! மரணம் நல்ல தருணம் தேடி வரவேண்டும்;என்பதை உணர்த்தி விட்டீர்கள்! இறைவன் பூரண உடல் சுகத்தை தங்களுக்கு தருவானாக !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
      கிடைப்பதற்கரிய தங்களின் துஆவிற்கும் மிக்க நன்றி மௌலானா!

      நீக்கு
  2. கவிக்குயில் இக்பாலின் வைரவிரிகளை சுமந்து கொண்டு புறப்படுகிறது ஒரு குயில்.
    مستريح ஆக ஓய்வெடுக்கும் எங்களின் பூமானின் பொற்பாதங்களை வருடிவிட்டு, கொடுங்கோல் அரசனை கொஞ்சம் ஓய்வெடுக்கச்சொல்லிவிட்டு,கடுகவெளி சித்தரின் பாடலில் இளைப்பாறிவிட்டு புறப்படுகிறது அக்குயிலின் பயணம்.
    பயணத்தின் இடையில் சீனப் படைத் தலைவனுக்கு அவனின் பலகீனத்தை புரிய வைத்துவிட்டு,உலகத்தை உள்ளங்கையில் வைக்கவேண்டும்,உள்ளத்தில்வைக்ககூடாது எனும் ஆண்மீக பாதையில் பயணிக்கிறது.
    மாவீரன் அலெக்ஸாண்டரின் மண்ணரையிலும்,மன்னர் ஹாரூன் ரஷீதின் மரண அறையிலும் தன் பயணத்தை முடிக்கிறது ஒப்பிலானிலிருந்து புறப்பட்ட அக்குயில்.
    குயிலின் பயணம் தொடரும்......இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லாஹு அக்பர்..
      எவ்வளவு ரசனையான ரம்மியமான வரிகள்.
      அல்லாமா இக்பாலின் வரிகளெல்லாம்
      தங்களிடம் பிச்சை வாங்கவேண்டும்போல் தெரிகிறதே..
      அடியேனின் கட்டுரையை விட
      தங்களின் கருத்துரை உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகிறதே..
      அல்ஹம்து லில்லாஹ்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புள்ள சீனி..
      உங்கள் வருகைக்கும்
      கருத்தூரக்கும்
      ஆழமான நன்றி..

      நீக்கு
  4. sunnath jamath kolgaiyin siiriya sindhanaiyalare miga arpudham alhamdhu lillah

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்ந்த கொள்கையை
      உரிமையாய்க் கொண்ட உத்தமரே..
      உங்கள் வருகைக்கும்
      உன்னத வரிகளுக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள் பல..

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...