22 பிப்ரவரி, 2012

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)




ரபீவுல் ஆகிர் வந்தவுடன் நம் நினைவில் முதலில் வருவது இறைனேசர்களின் தலைவர் சய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்தான்.
அவர்களின் வாழ்க்கை வரலாறு அதிகம் நினைவு கூறப்படும் இம்மாதத்தில் சில குறிப்புகளைத் தருவது பொருத்தம்.



 எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது. 

ஜனனம்

எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள், ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள். 

ஜனனத்தின் மகத்துவம்


மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். 

இவர்களின் பரம்பரை ஒரு பரிசுத்தமான குடும்பம்.
தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாருடைய ஆப்பிள் தெரியவில்லையே' என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பலமைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள மரத்தின் உரிமையாளரிடம் ஹலால் தேடுகிறார்கள். அவர், என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் செய்கிறேன்' ஆனால் அவள் குருடி;ஊமை; நொண்டி; இரண்டு கையும் சூகை; என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக்கூடாது. அதை ஹலாலாக்கிவிடுங்கள். அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார். திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தனர். ஏனெனில் அழகென்றால் அழகு அவ்வளவு அழகு. ஒரு குறை இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படி சொன்னார்? என்றதற்கு அந்த மாது விளக்கம் சொன்னார்: என் தந்தை சொன்னது உன்மைதான். என் கண்கள் தீமைகளைப் பார்க்காத குருடுதான். என் கைகள் தீயவற்றைச் செய்யாத ஊனம்தான். என் கால்கள் பாவத்தின் பக்கம் நடக்காத நொண்டிதான்.......''
இந்த தம்பதியருக்கு பிறந்தவர்கள்தான் தவசீலர் கௌதுனா அவர்கள். கடும் பசி நேரத்திலும் ஹராம் உண்டுவிடக்கூடாது என்ற பரிசுத்தமான தந்தை. எந்த நேரத்திலும் தீமைகளை நினைத்துக்கூட பார்க்காத தாய். இவர்களின் உதிரத்தில் உதித்தவரும் உத்தமராகத்தானே இருப்பார்கள்? 

அவர்கள் இவ்வையகத்தில் பிறந்த இரவு நிகழ்ந்த அற்புதங்களை அவர்களது அருமைத்தாயார் பின்வருமாறு விபரிக்கின்றார்கள். 


1) ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப்போகின்ற குழந்தை எனது காதலரும், அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுப சோபனம் கூறினார்கள். 


2) “வலிமார்கள்” அனைவரும் உங்கள் மகனுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள். எனவும், அவரது கால் பாதங்களை தங்களது புயங்களின் மேல் சுமந்தோராகவும், இருப்பர் என பெருமானாரைத் தொடர்ந்து ஸஹாபாக்கள் வாழ்த்துக் கூறினர். 


3) அன்று இரவு பிறந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் குத்பு நாயகத்தின் பொருட்டால் விலாயத்தைப் பெற்றன. 


4) மாண்புமிகு நோன்பு தலைப்பிறையன்று குத்பு நாயகம் பிறந்த காரணத்தால் அன்றைய தினம் பால் அருந்த மறுத்து விட்டார்கள். 


5) குத்பு நாயகத்தின் தோள் புயத்தின் மீது பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பாதங்களைச் சுமந்த அடையாளம் காணப்பட்டது. 



கல்வி

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள்.
அவர்கள் கல்வி கற்க சென்ற வழியில் ஒரு கொள்ளைக் கூட்டம் திருடமுயன்றதும், அவர்களிடம் உண்மை உரைத்ததால் திருடர்கள் மனம் மாறி மார்க்கத்தை ஏற்றதும் பிரபல்யமானது. தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 

ஷைக்கின் சகவாசம்

எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள். 

துறவு நிலை


மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள். 

காதிரியா தரீக்காவின் உருவாக்கம்

ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள்.

முஹ்யித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை

ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார். 

அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல் 

கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள். 


குடும்ப வாழ்க்கை

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள். 

மறைவு

40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது!!! 

மேலும் சில இணைப்புகள்  கீழே தரப்படுகின்றன. அவற்றில் போதுமான தகவல்கள் உண்டு. இம்மாதம் அடியேனுக்கு சில வேலைப் பளு இருப்பதால் மேற்கொண்டு சில முக்கிய குறிப்புகளை தட்டச்சு செய்ய நேரம் இல்லை. ஆகவே கீழ்கண்ட இந்த இணைப்புகளில் சென்று பயன் பெற்றுக் கொள்ளவும்.


 பொதுவாக ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுவோருக்கு இந்த தளத்தில்  நிறைய குறிப்புகள் உண்டு :


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...